
பல்வேறு திறமைகளை கொண்ட ஜெ.எஸ்.கே. சதீஷ் குமார், ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’ போன்ற படங்கள் மூலம் பல திறமையான இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். இவர், ஜெ.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் தேசிய விருதுகள் பெற்ற படங்களை தயாரித்ததுடன், ‘தரமணி’, ‘கபடதாரி’, ‘ஃபிரெண்ட்ஷிப்’, ‘அநீதி’, ‘வாழை’ போன்ற படங்களில் நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
இப்போது, ஜெ.எஸ்.கே. தனது முதல் இயக்குநர் முயற்சியாக ‘ஃபயர்’ படத்தை இயக்கியுள்ளார். பிப்ரவரி 14 அன்று வெளியான இந்த படம், 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பிரபல இயக்குநர்களின் படங்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்கும் இன்றைய சூழலில், ‘ஃபயர்’ படத்தின் நீடித்த வெற்றி தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை வெளியான சுமார் 80 படங்களில், ‘டிராகன்’, ‘குடும்பஸ்தன்’ போன்ற சில திரைப்படங்களே லாபம் ஈட்டியுள்ளன. இந்த நிலையில், பெரும்பாலும் புதுமுகங்கள் மற்றும் அறிமுக இயக்குநர் கூட்டணியில் உருவான ‘ஃபயர்’ இப்படியான வெற்றியைப் பெற்றுள்ளது. இது, கதையையும் திறமைகளையும் நம்பி படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. ‘ஃபயர்’ படத்தை ஜெ.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாரித்ததுடன், ஜெ.எஸ்.கே. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
‘ஃபயர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஜெ.எஸ்.கே.க்கு இயக்குநர் மற்றும் நடிகர் என பல புதிய வாய்ப்புகள் கிடைத்துவருகின்றன. இது குறித்து அவர் கூறுகையில், “நல்ல உள்ளடக்கத்தை தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்பதற்கு ‘ஃபயர்’ வெற்றியே சாட்சி. இதற்காக தமிழக மக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தரமான படங்களை தொடர்ந்து தயாரித்து இயக்குவதோடு மட்டுமில்லாமல், சவாலான வேடங்களில் தொடர்ந்து நடிப்பேன்,” என்றார்.